
” பாரிஸ் கஃபே ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
கதைக் கரு :-
ஆணவப்
படுகொலைப் பற்றிய சம்பவம் ஒன்றை கதையின் கருவாக கையில் எடுத்துக் கொண்டு படமாக்கியிருக்கின்றார் இந்தப் படத்தின் இயக்குநர்.
கதையின் போக்கு :-
காதல் சங்க காலம் முதல் இக் காலம் வரை தொடர்கிறது தொடர் வண்டியைப் போல. காதலை ஏற்பதும் மறுப்பதும் அவரவரின் பெற்றோர்களின் மனநிலையைப் பொறுத்தது. காதலுக்கு நான் எதிரியில்லை ஆனால்…. குறிப்பிட்ட சமூகத்தின் மீது ஏனோ தீராத வெறுப்பு. அவர்களும் மனிதர்கள் தானே ! ஏனோ அவர்களின் தன் மானம் அங்குத் தடுக்கிறது. இதனால் ஆணவப் படுகொலை பகிரங்கமாக அரங்கேறுகிறது.
அரசு மருத்துவர் குரு சோமசுந்தரம். கட்டிடக் கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோல். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சிறந்த தம்பதிகள் என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் இல்லறத்தை நல்லறமாக்கி நாடு போற்றும் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் மருத்துவ கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ்ஸுக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்கு இருக்கும் காஃபே ஒன்றில் சென்னையைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தினை பார்க்க நேர்கிறது. புகைப்படத்தினைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குரு சோமசுந்தரம் தன் மனைவியிடம் அந்தக் காதல் ஜோடியைப் பற்றிய உண்மைகளை சொல்கிறார். ஆனால் அவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்பதையும் சொல்கிறார்.
பத்திரிகை வாயிலாக அந்த இளம் காதலர்கள் பற்றிய செய்தியை அறிந்து கொண்ட அனுமோல் தன் கணவர் குரு சோமசுந்தரம் மீது கோபப்படுகிறார் . ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.
பெற்றோரின் பிரிவினைப் பற்றி அறிந்து கொண்ட குரு சோமசுந்தரத்தின் மகள் அர்ச்சனா. அவளின் காதலன் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். சமரசம் செய்கிறார் தன் பெற்றோர்களை ஒன்று சேர்ப்பதற்காக. அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? இளம் காதல் ஜோடி யார் ? அவர்களது இறப்புக்கும் குருசோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ? அடுக்கடுக்காக வினாக்களைத் தொடுத்தால் விடை சொல்லத்தானே வேண்டும் ? படத்தினைப் பார்த்து விடையை தெரிந்து கொள்ளலாமே !
திரைப்படம் வெறும் பொழுது போக்கு சாதனம் அல்ல ! சமூகத்தில் புரையோடும் சமூக சீர் கேடுகளை களைந்தெறியும் ஓர் சமூக ஊடகம்.