பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

Share the post

பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது.

கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில், பாரம்பரிய கிராம விருந்துடன் விழா நிறைவடைந்து. இது அனைவருக்கும் மறக்க முடியாத மகிழ்வான மாலையாக அமைந்தது.

கலாமயா சினிவர்ஸ் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்திருக்கும் ’என்ன விலை’ திரைப்படத்தை சஜீவ் பாழூர் எழுதி இயக்கியுள்ளார். சமூக, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த குடும்ப த்ரில்லர் திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜீ. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இந்தத் திரைப்படம் வென்று பெருமை சேர்த்துள்ளது. இதனால், படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் நன்றியுணர்வோடு தொடங்கும் வாய்ப்பு சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்களாலோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியாகிறது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு அளவற்ற அன்பும் ஆதரவும் கொடுத்த பாலம் கிராம மக்களே எங்கள் படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது ஒரு விளம்பர நிகழ்வு மட்டுமல்ல, அவர்களுக்கு நாங்கள் தெரிவித்த மனமார்ந்த நன்றியாகும்” என்றார்.

இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது கதைக்கான இடத்தை தேர்வு செய்வோம். ஆனால், சில நேரங்களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும் அந்தக் கதையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றனர். ‘என்ன விலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்கள் எங்களை குடும்பமாக அரவணைத்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சந்திப்பதற்கு முன், இந்த திரைப்படம் முதலில் அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, என்றென்றும் எங்களுக்கு மகிழ்ச்சியான நினைவு” என்றார்.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, ’என்ன விலை’ திரைப்படம் தனது முதல் ரசிகர்களை கண்டுபிடித்துவிட்டது. இந்த திரைப்படத்தை தங்களுடையதாக ஏற்றுக்கொண்ட பாலம் கிராம மக்கள்தான் முதல் பார்வையாளர்கள். அவர்களை கௌரவிப்பதன் மூலம், இந்த திரைப்படத்தின் பயணம் சமூக ஒற்றுமை மற்றும் இனிய நினைவுகளுடன் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *