பன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

Share the post

பன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

சுற்றுலா வாகனத்திற்கான குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை கருத்தில் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் வலியுறுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரான சபரிநாதன் பேசுகையில்,’ தமிழகம் முழுவதும் 25 லட்சம் தனியார் வாகன ஓட்டுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் நீண்டகால கோரிக்கையை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறச் செய்தால் அக்கட்சிக்கு நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். 25 லட்சம் வாகன ஓட்டுனர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து 75 லட்சம் வாக்குகள் எங்கள் இடத்தில் இருக்கிறது. அதாவது 12 சதவீத வாக்கு எங்களிடத்தில் இருக்கிறது. எங்களது கோரிக்கையை ஆட்சி அமைத்த பின் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்க உறுதி ஏற்கிறோம். அத்துடன் இது தொடர்பாக நாங்கள் தினந்தோறும் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை பணி நிமித்தமாக சந்திக்கிறோம். அவர்களிடம் எங்களது கோரிக்கையை ஏற்று வாக்குறுதி அளித்த கட்சிக்கு கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை மேற்கொள்வோம். இதன் மூலம் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் 3 கோடி வாடிக்கையாளர்களை- வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியும். எனவே எங்களது கோரிக்கையை அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக நாங்கள் மார்ச் 15ஆம் தேதிவரை காத்திருக்கவும் தீர்மானித்திருக்கிறோம். எங்களது நியாயமான கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அல்லது குறைந்தபட்சம் பரிசீலிக்கப்படாவிட்டால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை.’ என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *