
” மொத ராத்திரி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-
கதைநாயகன் ரிஷிகாந்த் காதல் தோல்வியால் மனம் துவண்டு துபாய்க்கு போகிறார் வேலையைத் தேடி. துபாயில் தங்கி வேலை செய்து விட்டு ஐந்து வருடம் கழித்து ஊர் திரும்புகின்றார்.
ரிஷிகாந்த்துக்கு தெரியாமலே குடும்பத்தார் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதித்து கதாநாயகி அனிஷ்மா அனில்குமாரை கரம் பிடிக்கிறார்.
வழக்கம் போல திருமணம் முடிந்த கையோடு முதல் ராத்திரி நடத்துவது நம் நாட்டின் பண்பாடு , கலாச்சாரம். அதன்படி முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய முதல் ராத்திரியில் மனம் விட்டு பேச முயற்சி செய்கிறார் ரிஷிகாந்த்.
மனத்தில் ஒருவனை சுமந்து கொண்டு இன்னொருவனிடம் எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்தக் காதல் படுத்தும் அவஸ்த்தை பெற்றோர்களை தலை குனிய வைக்கும் என்பதை எண்ணாமல் காதல் வலையில் சிக்கி வேதனை படுகின்றனர் இன்றைய காதலர்கள்.
முதல் இரவுக்கு காத்திருக்கும் வேளையில் கணவனை ஏமாற்றி விட்டு காதலனைத் தேடி அவனுடன் ஓட முயற்சி செய்கிறார் அனிஷ்மா அனில்குமார்.
இவர்களின் செயலைக் கண்ட ரிஷிகாந்த் என்ன முடிவு செய்கிறார். தன் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறாரா ? மனம் திருந்தி கதைநாயகி கணவனோடு சேர்ந்து வாழ்கிறாளா ? என்பதனை கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்வியலின் தத்துவத்தை பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் நகைச்சுவை உணர்வோடு சொல்லுவதே மொத ராத்திரி .
இயக்குநரின் கைவண்ணம் :-
பொதுவாக திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் அங்கு சில யதார்த்த செயல்முறை களை எப்படி கையாளுகின்றனர் என்பதை கண்டறியலாம்.
உறவினர்கள் இடையே மகிழ்ச்சி , சோகம் , மோதல் , சண்டை , எதிர்ப்பு ஆகியன உண்மைக்கு நெருக்கமாகவும் அதே சமயத்தில் யதார்த்தத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பது மிக அருமை.
கதையை காட்சிமை படுத்தி கதையை நகர்த்தும் விதம் அருமை.இயக்குநர் இயல்பான நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதிய கதையை மிக நேர்த்தியாக கதையை கொண்டு செல்கின்றார்.
பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயத்தில் சிந்திக்கவும் வைக்கிறார் இப் படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி அவரை நாமும் பாராட்டலாமே !
திரை நட்சத்திரங்கள் :-
இப் படத்தின் நாயகன் ரிஷிகாந்த் மருது எனும் கதாபாத்திரத்தை ஏற்று தன் நடிப்பால் தனி முத்திரையை பதிக்கிறார் இவரிடம் கதாநாயகனுக்குரிய அத்தனை தகுதியும் இருப்பதனால் திரை உலகில் வலம் வருவார் தன் நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவாரா ?
கதைநாயகி அனிஷ்மா அனில்குமார் மீண்டும் ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று சர்வ சாதாரணமாக நடித்து பார்வையாளரின் கைத்தட்டலை பெறும் இவர் முதல் பாதியில் அளவாக பேசி இரண்டாம் பாதியில் படம் முழுவதும் மௌன மொழியால் பேசா மடந்தையாக ( பெண்ணாக ) வலம் வரும் இவர் படத்தின் இறுதிக் காட்சியில் தன் மனக் குமுறலை அழுகை மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் கண்ணீரை இலவசமாக வரவழைக்கிறார். பாராட்டலுடன் கைத்தட்டலையும் பெறுகிறார்.