‘தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
‘தளபதி’ விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.*

32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் ‘தளபதி’ விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

இந்த ஆண்டு தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கிறார்.
இந்நிகழ்வு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் இன்று(28-06-24) நடைபெற்று வருகிறது. 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பெற்று வருகிறார்கள்.

இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த
S.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த E.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு ‘வைர தோடு’ வழங்கி கௌரவித்தார் ‘தளபதி’விஜய்.


அதேபோல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் A.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த K.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த R.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த D.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை(03-07-2024) அன்று மீதி உள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.