வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி!

Share the post

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் – அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.

‘வதந்தி சீசன் 2’ இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம்.

கலைத்துறை அறிமுகத்திற்கான பிளாஷ்பேக்..?

சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது… அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்… திரை துறையில் பணியாற்ற வேண்டும்… என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன் – லைட் மேன்- புரொடக்ஷன்- என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் ‘விஸ்காம் படிக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி’ என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன்.

நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன்.

என்னுடைய உருவத்தை வைத்தும்… நிறத்தை வைத்தும்… நிறைய பேர் கேலி செய்தனர் ‘கருப்பா இருக்கியே.. உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? ‘என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ… அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்… அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன்.

என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?

ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார்.‌ இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.

வதந்தி சீசன் 2 வாய்ப்பு…?

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் – காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், ‘நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?’ என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர் – காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், ‘எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?’ என கேட்டார். ‘வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே.. அதை விட்டு விட மனமில்லை…’என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

உங்கள் பார்வையில் வதந்தி சீசன் 2…?

வதந்தி சீசன் 1 போல்.. சீசன் 2 வரும் சூப்பர் ஹிட். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது. வதந்தி சீசன் 2 வை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள்.

ஃப்யூச்சர் ஐடியா..?

இந்த வெப்சீரிஸிற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரை காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.

திரைத் துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ‘தெய்வத்தால் ஆகாது எனினும்..’ என்ற திருக்குறளை போல் கடுமையாக முயற்சித்தால்… அந்த நம்பிக்கை என்னை கைவிடாது என்று நம்புகிறேன்.

சினிமாவில் தான் என் வாழ்க்கை. நடிகராக இல்லை என்றால்.. சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

உங்கள் சமூக ஊடக பக்கம்..?

சோசியல் மீடியாவில் நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் arjun_chakkaravarthy என்ற ஐடியை வைத்திருக்கிறேன். அதிலும் இந்த ஐடியை இதுவரை பிரைவேட்டாகத்தான் வைத்திருந்தேன். வதந்தி சீசன் 2 வெளியான பிறகு தான் அதனை பப்ளிக் ஆக்கினேன். இதில் இனிமேல் என் படம் சம்பந்தமான விசயங்கள்… என்னுடைய எண்ணங்கள் ஆகியவற்றை போஸ்ட் செய்வேன்.

அவெர்னஸ் தொடர்பான போஸ்ட்களை ரீபோஸ்ட் செய்திருக்கிறேன். சில விசயங்களில் என்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்.‌

விஜய் Vs வதந்தி சீசன் 2..?

முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.‌ வதந்தி சீசன் 2 வை விஜய் பார்த்துவிட்டு என்ன சொல்வார் ? என்ற பதட்டம் நிறையவே இருக்கிறது.

அதர்ஸ் வெப் சீரிஸ் – வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் என்ன டிஃபரன்ஸ்?

டைரக்டர் ஆண்ட்ரூ சார் இதற்காக மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்து எழுதி, இயக்கி இருக்கிறார். நாங்கள் அனைவரும் இரண்டு ஆண்டு காலம் கஷ்டப்பட்டும்… இஷ்டப்பட்டும்… உழைத்திருக்கிறோம். இது அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்வதை விட நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கிறேன்.

  • உங்களுடைய முதல் ரசிகரை பற்றி…?

வதந்தி சீசன் 2 வை பார்த்துவிட்டு, அதில் சுந்தரேசனை ரசித்து என்னுடைய ரசிகராக அதிலும் முதல் ரசிகராக யாராக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம்தான்.

சினிமா இல்லாமல் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி இருக்கிறீர்களே.. இது குறித்து எப்பவாவது கவலைப்பட்டதுண்டா… ?

இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் இங்கு கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எனக்கு எதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ.. அதில் நூறு சதவீதம் உழைத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

வதந்தி சீசன் 2 – மறக்க முடியாதது எது?

இந்த வெப்சீரிஸில் சுந்தரேசன் அதிகமாக யாரிடம் பேச மாட்டான். அதில் அவனை ஒரு காட்சியில் தலை கீழாக கட்டி போட்டு தொங்க விட்டு இருப்பார்கள். அந்த காட்சியை பற்றி இயக்குநர் சொன்னவுடன் தலைகீழாக நாம் தொங்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டாம் என நினைத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அந்த காட்சிக்காக காத்திருந்தேன். காலையில் எட்டு மணிக்கு வந்த என்னை இரவு எட்டு மணிக்கு கட்டித் தொங்க விட்டார்கள். படப்பிடிப்பு விடிகாலை ஐந்து மணி வரை சென்றது. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அழத் தொடங்கி விட்டேன். வலி பின்னி எடுத்தது. அதன் பிறகு என்னை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தூக்கி, காரில் உட்கார வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அதனையும் சுகமாகவே அனுபவித்தேன். இதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நடித்த போது அங்கு கூடியிருந்த படக் குழுவினர் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறாய் என கைத்தட்டி பாராட்டினார்.

சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை படித்து வரும் நீங்கள் இந்த இணைய தொடரில் சுந்தரேசன் எனும் பள்ளி மாணவனாக சீருடை அணிந்து நடித்த போது என்ன நினைத்தீர்கள்..?

பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்ததுண்டு. ஆனால் சுந்தரேசனை போல் எந்த பெண்ணையும் ஃபாலோ செய்யவில்லை. அதே சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது நான் சுந்தரேசன் கேரக்டருக்கு நேர் ஆப்போசிட். எப்போதும் பிரண்ட்ஸ்களுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டே இருப்பேன். அதனால் சுந்தரேசனாக ஸ்கூல் யூனிபார்மை அணிந்து நடித்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது.


அர்ஜூன் சக்கரவர்த்தியின் ராபிட் ஃபயர்
மொமண்ட்ஸ்

பெற்றோர்கள் …

அவர்கள் தான் என்னுடைய முதல் கடவுள்

நம்பிக்கை ….

எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கை மட்டும் தான் நம்மை கடைசி வரை காப்பாற்றும் ஆயுதம். இந்த நம்பிக்கையை யாரும் ஒருபோதும் கைவிடாதீர்கள்.

ஆக்சன் ஹீரோ ….

அர்ஜூன் சார் இருக்கிறாரே..! சினிமாவில் ஆக்சன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்க விடும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை இங்கு நானே செய்ய வேண்டும் என்ற போது இரட்டிப்பு சந்தோஷம் வரும். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

பிடித்த நடிகர்….

விஜய் சார். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருக்கலாம்.

பிடிச்ச ஹீரோயின்….

எல்லாரையும் பிடிக்கும்.

பிடிச்ச செலிபிரிட்டி….

‘வதந்தி சீசன் 2’வில் முடக்கத்தான் மணியாக நடித்திருக்கும் யஷ்வந்த்- ஒரு சோசியல் மீடியா செலிபிரிட்டி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த போஸ்ட்டை லைக் செய்திருக்கிறீர்கள். ஷேர் செய்திருக்கிறீர்கள்?

இப்போ வதந்தி சீசன் 2 தொடர்பான போஸ்ட்களை மட்டும் தான் லைக் செய்கிறேன். ஷேர் செய்கிறேன். அதில் என்னுடைய போஸ்ட் ஏதேனும் வருகிறதா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *