48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல் !

Share the post

48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர், வெளியான வெறும் 48 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ட்ரைலர் உலக அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ட்ரைலர் வெளியாகி வெறும் 48 மணி நேரத்திற்குள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து, இந்த படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நிரூபித்துள்ளது.

இந்த ட்ரைலரின் மிரட்டலான பின்னணி இசையும், தெறிக்கவிடும் வசனங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இதன் ஆடியோ ட்ரெண்டாகி வருவதுடன், ஏராளமான ரீல்ஸ் மற்றும் ரசிகர்களின் எடிட் வீடியோக்களும் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், கூகுள் ட்ரெண்ட்ஸிலும் இந்த படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ட்ரைலர் வெளியான பிறகு, படத்தை பற்றியும், அதில் நடித்துள்ள நட்சத்திரங்கள் குறித்தும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது.

துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இம்முறை இந்த போராட்டம் மிகவும் தனிப்பட்ட முறையில், உணர்வுப்பூர்வமாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ‘ஜஸ்கிரத் சிங் ரங்கி’ மற்றும் ‘ஹம்சா அலி மசாரி’ என இரண்டு மாறுபட்ட வெறித்தனமான கதாபாத்திரங்களில் நடித்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிக சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், ஆதிக்கம் செலுத்தும் எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பை பல மடங்கு கூட்டியுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த ஆக்‌ஷன் கலந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோருடன் இணைந்து ஆதித்யா தர் இந்த படத்தை தயாரித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் 2026 மார்ச் 19ம் தேதி குடி பத்வா, உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு இந்த படம் கோலாகலமாக வெளியாகவுள்ளது.
https://www.instagram.com/reel/DVqSBUXDBXj/?igsh=MW9ocWRvYW4zcHM3cQ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *