
ஜோதிடம் மற்றும் குற்ற விசாரணை என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது
புதுமையான கருத்துடன், விறுவிறுப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகும் ‘ஆஸ்ட்ரோ லேனா’!
மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் 72 வயதில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆஸ்ட்ரோ லேனா’!
ஜோதிடத்தின் மூலம் குற்றங்கள் கண்டுபிடிப்பு! – இதுவரை சொல்லப்படாத கதைக்கருவுடன் உருவாகும் ‘ஆஸ்ட்ரோ லேனா’ திரைப்படம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெறுவதுண்டு. அப்படி ஒரு வித்தியாசமான கதைக்கருவுடன், விறுவிறுப்பான குற்ற விசாரணை திரைப்படமாக உருவாகி வருகிறது ‘ஆஸ்ட்ரோ லேனா’.
அனந்து புரொடக்ஷன்ஸ் வழங்கும் இப்படத்தில், பல ஆண்டுகளாக கலை உலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் கலைஞன் லக்ஷ்மண் நாயகனாக நடிக்கிறார். 72 வயதாகும் லக்ஷ்மண், வயதை பொருட்படுத்தாமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் கதையின் நாயகனாக முத்திரை பதிக்க களம் இறங்குகிறார்.
இப்படத்தின் கதையின் நாயகனாக நடிப்பதோடு, கதை எழுதி இயக்ககும் மக்கள் கலைஞன் லக்ஷ்மணின், அனுபவம் மற்றும் கலை மீதான ஆர்வம் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லப்படாத மற்றும் முயற்சித்திராத ஒரு புதுமையான கதைக்கருவுடன் உருவாகி வரும் இப்படத்தில் ஜோதிடம் மற்றும் குற்ற விசாரணை என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை கையாளப்பட்டுள்ளது படத்தின் சிறப்பம்சமாகும்.
இப்படத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் பெயர் பெற்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் செந்தில், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், ஷகிலா, அப்புக்குட்டி, குண்டு ஆர்த்தி, பிரியங்கா, பாவா லக்ஷ்மணன், ரேகா, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’ஆஸ்ட்ரோ லேனா’ திரைப்படத்தின் மையக் கருத்து ஜோதிடத்தின் மூலம் குற்றங்களை கண்டுபிடிப்பது என்பதாகும். கிரக நிலைகள், ஜாதக ரகசியங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் போன்றவற்றின் அடிப்படையில் மர்மமான குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதைக்களம் இப்படத்தில் இடம்பெறுகிறது. இந்த புதிய அணுகுமுறை தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இசையமைக்கிறார். இயக்குநர் எஸ்.வினோத்குமார் பாடல்கள் எழுதியுள்ளார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடைந்து, வரும் ஏப்ரல் மாதத்தில் ’ஆஸ்ட்ரோ லேனா’ திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
நகைச்சுவை, சஸ்பென்ஸ், திருப்பங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகிய அனைத்தையும் இணைத்து, பார்வையாளர்களுக்கு புதுமையான திரை அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக உருவாகி வருவதோடு, தனித்துவமான கதைக்களம் மற்றும் நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால், ’ஆஸ்ட்ரோ லேனா’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.